சென்னை: வங்கியில் போலியான நகைகளை அடமானம் வைத்து, ரூ.2.38 கோடி மோசடி செய்த வழக்கில், மேலாளர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர். சென்னை, அண்ணா சாலையில் உள்ள கனரா வங்கியின் துணை மேலாளராக இருப்பவர் எடுப்பலபட்டி விஜய சங்கர். இவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்திருந்தார்.
அதில், ‘வங்கியில் அடமானம் வைக்கப்பட்டிருந்த நகைகள் ஆய்வு செய்யப்பட்டது. அதில், 21 தங்க நகைக் கடன்களில் போலி தங்க நகைகளை அடமானமாக வைத்து ரூ.2.38 கோடி பெறப்பட்டிருந்தது தெரிய வந்தது. இந்த மோசடிக்கு வங்கியில் பணி செய்து வந்த சிலர் துணையாக இருந்துள்ளனர். அவர்களை அடையாளம் கண்டு கைது செய்ய வேண்டும்.மேலும், போலி நகைகளை அடமானமாக வைத்து பெறப்பட்ட பணத்தை மீட்டுத் தர வேண்டும்’ என புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
உரிய விசாரணை... இது குறித்து, உரிய விசாரணை நடத்த காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார். அதன்படி, சென்னை மத்திய குற்றப் பிரிவு கூடுதல் காவல் ஆணையர் ராதிகா மேற்பார்வையில், வங்கி மோசடி தடுப்பு பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
இதில், இந்த மோசடி தொடர்பாக சம்பந்தப்பட்ட வங்கியின் நகை மதிப்பீட்டாளராக இருந்த சிந்தாதிரிப்பேட்டை சரவணன் (42), மற்றும் போலி நகைகளை அடமானம் வைத்து பணம் பெற்ற சைதாப்பேட்டை ஆலந்தூர் சாலை பகுதியைச் சேர்ந்த ஜானகி ராமன் (39) ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.