சென்னை: நுங்கம்பாக்கத்தில் காங்கிரஸ் பிரமுகர் கடையில் நடைபெற்ற திருட்டு சம்பவத்தில், தொடர்புடையவர்களை கைது செய்யாமல் போலீஸார் மெத்தனம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை, நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில், காங்கிரஸ் பிரமுகர் கவுரி சங்கர்மண்பாண்டம், சிற்பங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.
அதே பகுதியில் உள்ள இவரது குடோனில் கடந்த மாதம் 22-ம் தேதி மணற் சிற்பங்கள், கடப்பா கற்கள், இரும்பு பொருட்கள், டைல்ஸ் பாக்ஸ், கான்கிரீட் சிமெண்ட் தொட்டி, கிரானைட் மார்பில்ஸ் போன்றவை திருடு போனது.
இதுதொடர்பாக, கவுரி சங்கர் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதுகுறித்து, போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதில், கொள்ளையர்கள் 4 பேர், பைக்கில் வந்து கவுரி சங்கர் குடோனில் உள்ள பொருட்களை சரக்கு வாகனத்தில் ஏற்றி திருடி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, திருடிய நபர்களை போலீஸார் அடையாளம் கண்டனர். ஆனால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் நுங்கம்பாக்கம் போலீஸார் காலம் தாழ்த்தி வருவதாகவும், குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.