க்ரைம்

திருமலா பால் நிறுவன மேலாளர் தற்கொலையா, கொலையா? - போலீஸ் தீவிர விசாரணை

செய்திப்பிரிவு

சென்னை: திருமலா பால் நிறுவன மேலாளர் நவீன் தற்​கொலை செய்து கொண்​டா​ரா அல்​லது யாரேனும் அவரை கொலை செய்து தூக்​கில் தொங்க விட்டன​ரா என்​ற கோணத்தில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆந்​திர மாநிலம், கிருஷ்ணா மாவட்​டம் வையூர் கிராமத்​தைச் சேர்ந்​தவர் நவீன் பொலினேனி (37). திரு​மண​மாகி குடும்​பத்​துடன் சென்னை புழல் அடுத்த பிரிட்​டானியா நகர், முதல் தெரு​வில் உள்ள அடுக்​கு​மாடி குடி​யிருப்​பில் வசித்து வந்​தார். இவர் சென்​னை​ மாதவரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பொன்னியம்மன்மேட்டில் உள்ள திரு​மலா பால் நிறு​வனத்​தில் கடந்த மூன்​றரை ஆண்​டு​களாக கரு​வூல மேலா​ள​ராகப் பணியாற்றி வந்​தார்.

இந்​நிலை​யில், அண்​மை​யில் திரு​மலா பால் நிறு​வனம் அவர்​களது நிறுவன வரவு - செலவு கணக்​கு​களை சரி​பார்த்து தணிக்கை செய்​துள்​ளது. அப்​போது, ரூ.40 கோடி முறை​கேடு நடந்திருப்​பது தெரிய​வந்​தது. நவீன் அந்த பணத்தை கையாடல் செய்​த​தாக​வும், அந்த பணத்தை அவரது குடும்​பத்​தினர் மற்​றும் நண்​பரின் வங்கி கணக்​குக்கு மாற்றி மோசடி​யில் ஈடு​பட்​ட​தாக​வும் குற்​றம்சாட்டப்பட்டது.

இது தொடர்​பாக அந்​நிறு​வனம் சார்​பில் கடந்த மாதம் 25-ம் தேதி கொளத்​தூர் காவல் மாவட்ட துணை ஆணை​யர் பாண்​டிய​ராஜனிடம் புகார் தெரிவிக்​கப்பட்​டது. இதையடுத்​து, போலீ​ஸார் நவீனை நேரில் வரும்​படி கூறி போனில் அழைத்து விசா​ரித்​த​தாக​வும், அப்​போது, ‘பணத்தை திருப்பி கொடுத்து விடுகிறேன். என் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டாம்’ என போலீ​ஸாரிடம் நவீன் கேட்​டுக் கொண்​ட​தாக​வும் கூறப்​படு​கிறது. இதுதவிர மேலும் சிலர் நெருக்கடி கொடுத்ததாகவும் தெரிகிறது.

இந்​நிலை​யில், கடந்த புதன்கிழமை இரவு அவர் வீட்​டருகே உள்ள குடிசை​யில் தூக்​கில் தொங்​கிய நிலை​யில் நவீன் சடமாகக் கிடந்​தார். தகவல் அறிந்து வந்த புழல் போலீ​ஸார், உடலை மீட்டு பரிசோதனைக்​காக ஸ்டான்லி அரசு மருத்​து​வமனைக்கு அனுப்பி வைத்​தனர். போலீ​ஸ் விசா​ரணைக்கு பயந்து நவீன் தற்கொலை செய்து கொண்​டா​ரா அல்​லது யாரேனும் அவரை கொலை செய்து தூக்​கில் தொங்க விட்​டன​ரா என்​ற கோணத்தில் போலீஸார் விசாரணையை தொடங்கினர். இந்நிலையில், நவீன் மரணம் தொடர்பாக சென்னை மேற்கு மண்டல காவல் இணை ஆணையர் திஷா மித்தல் விசாரணையை தொடங்கி உள்ளார்.

முன்னதாக, ‘நவீன் மீது கொளத்தூர் துணை ஆணையர் பாண்டியராஜனிடம் நிறுவனம் அளித்த புகாரானது விசாரணைக்காக வழிவழியாக புழல் உதவி ஆணையருக்கு அனுப்பப்பட்டு, அவர் மூலமாக மாதவரம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் விஜயபாஸ்கருக்கு அனுப்பப்பட்டிருந்தது. இதில் விசாரணை தொடங்கப்படவில்லை. அவரை காவல் நிலையம் அழைத்து விசாரிக்கவும் இல்லை.

மேலும், கடைசியாக நவீன் அவரது சகோதரி, அவர் பணி செய்த பால் நிறுவனத்துக்கும் மின்னஞ்சல் அனுப்பி இருந்தார். அதில், காவல் துறையை பற்றி எதுவும் குற்றம்சாட்டவில்லை’ என காவல் ஆணையர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT