நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம் பெண்ணுக்கு இரு வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆனது. அவருக்கு குழந்தைகள் இல்லை. உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சில மாதங்களுக்கு முன்பு அவரது தாயார் வீட்டுக்குச் சென்று தங்கி உள்ளார்.
உறவினர்கள் கூறிய ஆலோசனையின் பேரில் மேக்காமண்டபம் பகுதியில் உள்ள ஒரு கிறிஸ்தவ சபைக்கு அந்த பெண் சென்றுள்ளார். அங்கு சபை போதகர் ரெஜிமோன் (43) என்பவர் பெண்ணின் நோய் குணமாக தனிமையில் ஜெபம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இதனை நம்பிய பெற்றோரும் மகளை மட்டும் ஜெபம் செய்ய அனுப்பியுள்ளனர். அந்த நேரத்தில் போதகர் ரெஜிமோன், பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
அப்பெண் போதகரின் பிடியில் இருந்து தப்பித்து வெளியே ஓடி வந்துள்ளார். பிறகு நடந்த விவரத்தை அறிந்து கொண்ட பெற்றோர், தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், ரெஜிமோனை கைது செய்து நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் போதகர் ரெஜிமோன் மீது மேலும் பல பாலியல் புகார்களும் வந்துள்ளது. இந்த புகார்கள் குறித்து தக்கலை போலீஸார் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.