க்ரைம்

ஆபாச நடனமாடிய அர்ச்சகர்களின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

செய்திப்பிரிவு

ஆபாச நடனமாடிய அர்ச்சகர்களின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஶ்ரீவில்லிபுத்தூரில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்துக்கு உட்பட்ட பெரிய மாரியம்மன் கோயில் உதவி அர்ச்சகர் கோமதி விநாயகம் மற்றும் திருவிழாவுக்காக வந்த தற்காலிக அர்ச்சகர்கள் மது போதையில் வீட்டில் நடனமாடும் வீடியோ மற்றும் கோயிலில் பெண்கள் மீது விபூதி அடித்து விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

          

இதையடுத்து சம்பந்தப்பட்ட அர்ச்சகர்களை கோயிலில் இருந்து நீக்கியும், பூசை உள்ளிட்ட விவகாரங்களில் தலையிட தடை விதித்து அறநிலையத் துறை சார்பில் உத்தரவிடப்பட்டது. இச்சம்பவம் குறித்து பக்தர் பாண்டியராஜன் அளித்த புகாரின்பேரில் ஆபாச நடனமாடிய அர்ச்சகர்கள் கோமதி விநாயகம் (30), கோலப்பன் என்ற வினோத் (32), கணேசன் (38) மற்றும் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்ட சபரிநாதன் (38) ஆகியோர் மீது 3 பிரிவுகளின் கீழ் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து 4 பேரும் தலைமறைவாகினர்.

இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு கோமதி விநாயகம், கோலப்பன், கணேசன் ஆகியோர் சேர்ந்தும், சபரிநாதன் தனியாகவும் மனு தாக்கல் செய்தனர். நேற்று முன்தினம் சபரிநாதனின் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப் பட்டது. நேற்று விசாரணைக்கு வந்த கோமதிவிநாயகம், கோலப்பன், கணேசன் ஆகியோரது முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஜெயக்குமார் உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT