சென்னை: மயக்க ஊசி செலுத்தி சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் போலீஸ் எஸ்.ஐ. மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர் அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமிக்கு தாயார் இல்லை.
தந்தையும், தாத்தாவும் வளர்த்து வருகின்றனர். இந்தச் சிறுமி கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை தனது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென்று மாயமானார். இந்நிலையில், நுங்கம்பாக்கம் லேக்-ஏரியா பகுதியில் உள்ள ஆயுதப்படை போலீஸ் எஸ்.ஐ ராஜூ என்பவருக்குச் சொந்தமான வீட்டில் சிறுமி மயங்கிய நிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தந்தையும், தாத்தாவும், சிறுமியை உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அந்த வீட்டில் இருந்தவர்களிடம் சிறுமியின் இந்த நிலை குறித்து தாத்தாவும், தந்தையும் கேட்டபோது, இருவரையும் சரமாரியாகத் தாக்கி விரட்டி விட்டுள்ளனர். இதற்கிடையே, தனக்கு மயக்க ஊசி போட்டு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் அந்தச் சிறுமி தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, சம்பந்தப்பட்ட போலீஸ் எஸ்.ஐ ராஜூ மீது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையர் வனிதா நேரடி விசாரணையில் இறங்கினார். குழந்தைகள் நல அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் எஸ்.ஐ ராஜூ மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிவில் அவர் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, அத்துமீறி நடந்துகொண்டதாக எஸ்.ஐ மனைவி கொடுத்த புகார் அடிப்படையில், சிறுமியின் தந்தை மீது நுங்கம்பாக்கம் போலீஸார் தனியாக ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர்.