சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் அருகே ஸ்கூட்டர் மீது சரக்கு வாகனம் மோதியதில் பெண் உட்பட இருவர் உயிரிழந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அருகே நெய்வயலைச் சேர்ந்த சந்தானகிருஷ்ணன் மனைவி அயோத்தியம்மாள் (60). அவரும் அவரது மகள் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே விநாயகபுரத்தைச் சேர்ந்த கலைச்செல்வியும் (35) மறவமங்கலம் அருகேயுள்ள வாழைபெருமாள் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்ல இன்று (ஜூன் 20) பேருந்தில் வந்தனர்.
வேளாரேந்தல் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய அவர்களை, உறவினரான வாழைபெருமாளைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் (58) தனது ஸ்கூட்டரில் ஊருக்கு அழைத்துச் சென்றார்.
அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனம் அவர்கள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த மூவரையும் 108 ஆம்புலன்ஸில் காளையார்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர்.
இதில் முத்துக்கிருஷ்ணன், அயோத்தியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கலைச்செல்வி மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். இது குறித்து காளையார்கோவில் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.