சென்னை: ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து சென்னை வழியாக செங்கல்பட்டு செல்லும் சர்க்கார் விரைவு ரயிலில் ரூ.38 லட்சம் ஹவாலா பணத்தை கடத்திய இளைஞரை எழும்பூர் ஆர்.பி.எஃப் போலீஸார் கைது செய்தனர். மேலும், அவரிடம் ஆர்.பி.எஃப் மற்றும் வருமானவரித் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில், ஆர்.பி.எஃப் காவல் ஆய்வாளர் கே.பி.செபாஸ்டின் தலைமையில் ஆர்பிஎஃப் போலீஸார் ஞாயிற்றுக் கிழமை அதிகாலை கண்காணிப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது, எழும்பூர் ரயில் நிலையத்தின் 8-வது நடைமேடைக்கு சர்க்கார் விரைவு ரயில் வந்தது. அந்த ரயிலில் வந்து இறங்கிய இளைஞர், சந்தேகிக்கும் வகையில் இருந்ததால் அவரை ஆர்பிஎஃப் போலீஸார் பிடித்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், அவரிடம் இருந்த பையை சோதனை செய்ததில், ஆவணம் ஏதுமின்றி கட்டு கட்டாக பணம் வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதைடுத்து, அவரை எழும்பூர் ஆர்பிஎஃப் அலுவலகத்துக்கு போலீஸார் அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அதில், அந்த நபர் ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டம் சிராலா பகுதியைச் சேர்ந்த நரேஷ் (33) என்பதும், சென்னையில் மற்றொரு நபரிடம் பணத்தை கொடுக்க வந்து, காத்திருந்ததும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், இது குறித்து, வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ஆர்பிஎஃப் போலீஸார் தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த வருமான வரித்துறை அதிகாரிகள் நரேஷ் கொண்டு வந்த ரூ.38 லட்சம் பணத்தை கைப்பற்றினர். மேலும், நரேஷிடம் ஆர்பிஎஃப் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.