கடலூர்: தனியார் பள்ளியில் பெண் ஆசிரியை மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கடலூர் முதுநகர் அருகேயுள்ள செம்மங்குப்பம் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணராஜ். மருத்துவப் பிரதிநிதி. இவரது மனைவி நந்தினி(29). இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த ஓராண்டாக சேடப்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் நந்தினி ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், நேற்று காலை பள்ளிக்கு வந்த ஆசிரியை நந்தினி, மதியம் 12 மணியளவில் பள்ளியின் மாடியில் உள்ள ஓர் அறைக்குள் சென்று, கதவை தாளிட்டுக் கொண்டதாகவும், நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாததால், சக ஆசிரியர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்த முதுநகர் போலீஸார் நந்தினியின் உடலை மீட்டு, பிரதேப் பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்று விசாரித்து வருகின்றனர்.