க்ரைம்

சென்னை | 5 வயது மகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

செய்திப்பிரிவு

சென்னை: 5 வயது மகளை தினமும் குளிப்பாட்டுவதாகக்கூறி பாலியல் துன்புறுத்தல் அளித்த தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை பகுதியில் மனைவி மற்றும் தனது 5 வயது மகளுடன் வசிக்கும் 40 வயது மதிக்கத்தக்க நபர், மனைவி தினமும் வேலைக்கு புறப்பட்டுச் சென்றதும், தனது மகளை குளிப்பாட்டுவதாகக்கூறி பாலியல் துன்புறுத்தல் அளித்து வந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக வெளிநாட்டில் வசிக்கும் அந்த சிறுமியின் பெரியம்மா போலீஸில் அளித்த புகாரின்பேரில் திருவான்மியூர் அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தந்தையை கைது செய்தனர்.

இந்த வழக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்பாக நடந்தது. அப்போது போலீஸார் தரப்பில் ஆஜரான அரசு சிறப்பு வழக்கறிஞர் எஸ்.அனிதா, 5 வயது மகளுக்கு தந்தையே பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக குற்றச்சாட்டுகளை சரிவர நிரூபித்தார்.

அதையடுத்து நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட தந்தைக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

SCROLL FOR NEXT