சென்னை: மறைந்த வாடிக்கையாளர்களின் பணம் உட்பட வங்கியில் இருந்து ரூ.23.48 லட்சம் மோசடி செய்ததாக கிளை மேலாளர், எழுத்தர் கைது செய்யப்பட்டனர். இந்தியன் வங்கியின் சென்னை தெற்கு மண்டல மேலாளர் சத்யநாராயணா, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 8-ம் தேதி ஒரு புகார் கொடுத்தார்.
அதில் அவர் கூறியிருந்ததாவது: இந்தியன் வங்கியின் சாந்தோம் கிளை மேலாளராக இருந்த வேளச்சேரியை சேர்ந்த சுந்தர் மோகன் மாஜி (47), வங்கி எழுத்தராக (கிளார்க்) இருந்த மயிலாப்பூர் பஜார் ரோடு பகுதியை சேர்ந்த ஜெய்சிங் (57) ஆகிய இருவரும் வாடிக்கையாளர்களின் பணத்தை அவர்களுக்கு தெரியாமலேயே அவர்களது கையெழுத்தை போலியாக போட்டு எடுத்தும், மறைந்த வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை கையாடல் செய்தும், வாடிக்கையாளர்களின் அனுமதி இன்று வங்கி கடன் பெறுதல் உட்பட பல்வேறு வகைகளில் வாடிக்கையாளர்களின் பணம் ரூ.23.48 லட்சத்தை கையாடல் மற்றும் மோசடி செய்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறியிருந்தார்.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார். அதன்படி, மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையர் ராதிகா தலைமையிலான வங்கி மோசடி புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். புகார் உண்மை என தெரியவந்ததை அடுத்து, சுந்தர் மோகன் மாஜி, ஜெய்சிங் ஆகிய 2 பேரும் நேற்று கைது செய்யப்பட்டனர். பின்னர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பபட்டனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.