சேலம்: சேலம் பழைய பேருந்து நிலையத்தில் நேற்று காலை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவர், கல்லூரி செல்வதற்காக பேருந்துக்கு காத்திருந்தார். அப்போது, ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவர், அந்த மாணவியிடம் பேச்சுக் கொடுத்தார். திடீரென அவர்களிடையே வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியின் வயிற்றில் குத்தினார்.
இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரைப் பிடிக்க முயன்றனர். உடனே அந்த இளைஞர், தனது கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். தகவலறிந்து வந்த சேலம் டவுன் போலீஸார், இருவரையும் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “கல்லூரி மாணவியுடன் இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகிய இளைஞர், தொடர்ந்து நட்பாகப் பழகியுள்ளார். ஒரு கட்டத்தில், அவர் மாணவியைக் காதலிக்க ஆரம்பித்துள்ளார்.
இதையறிந்த மாணவி காதலிக்க மறுத்து, செல்போனில் பேசுவதை நிறுத்திக் கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர், பேருந்து நிலையத்தில் காத்திருந்த மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றுள்ளார். மேலும், தனது கழுத்தை அறுத்துக் கொண்டுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகிறோம்” என்றனர்.