சென்னை: சென்னையில் கொள்ளையடித்துவிட்டு விமானம் மூலம் ஐதராபாத் செல்ல முயன்ற கொள்ளையர்களை, புறப்பட தயாராக இருந்த விமானத்தை நிறுத்தி போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், இந்த செயின் பறிப்புச் சம்பவத்தில் ஈடுபட்ட மூவரின் புகைப்படங்களையும் போலீஸார் வெளியிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக காவல்துறை தரப்பில் கூறியிருப்பதாவது: நேற்று (மார்ச் 25) இரு சக்கரவாகனத்தில் இரண்டு நபர்கள் சென்னை பெருநகர காவல் தெற்கு மண்டலத்துக்குட்பட்ட சைதாப்பேட்டையில் காலை சுமார் 6 மணிக்கு செயின் பறிப்பில் ஈடுபட்டனர். மேலும் 5 இடங்களில் தொடர்ச்சியாக செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றதை ஒட்டி சென்னை பெருநகர காவல் ஆணையர் அறிவறுத்தலின் பேரில் சென்னை முழுவதும் 56 இடங்களில் தீவிர வாகன சோதனைகள் நடைபெற்றன.
இதுகுறித்து சிசிடிவி கேமராப் பதிவுகளை ஆய்வு செய்ததில் இருந்தும், விசாரணையிலும் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு நபர்களும் வெளிமாநிலத்தைதச் சேர்ந்த நபர்கள் என தெரிய வந்ததால் உடனே விமானநிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் விமான நிலைய காவல் ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டதில், அவசரமாக கடைசி நேரத்தில் ஐதராபாத் செல்லும் விமானத்துக்கு இரண்டு நபர்கள் டிக்கெட் கேட்டதாகவும், அதில் ஒரு நபர் டிக்கெட் வாங்கி சென்றதாகவும் மற்றொரு நபரின் அடையாள அட்டை சரியாக இல்லாத காரணத்தினால் டிக்கெட் வழங்கவில்லை என்றும் கிடைத்த தகவலின் பேரில் ஐதராபாத் விமானம் புறப்பட தயார் நிலையில் இருந்த போது உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் விமான கட்டுபாட்டு அறைக்கு உரியமுறையில் தகவல் அறிவித்து விமானம் நிறுத்தப்பட்டது.
உடனே விமான நிலைய காவல் ஆய்வாளர், ஏற்கெனவே அடையாளம் காணப்பட்ட குற்றவாளியை கைது செய்து விமானத்துக்கு வெளியே இறக்கி கொண்டுவந்தார். பின்னர் மற்றொரு நபர் ஏர் இந்தியா விமானம் மூலம் மும்பை செல்வதற்கு தயாராக இருந்த போது சென்னை விமான நிலையத்திற்குள் வைத்து கைது செய்யப்பட்டார். அவர்களை விசாரணை செய்ததில் இக்குற்றத்தில் ஈடுபட்ட மூன்றாவது நபர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பினாக்கி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் ஐதராபாத்துக்கு செல்வது தெரியவந்தது.
உடனடியாக மத்திய ரயில்வே பாதுகாப்பு படைக்கு இதுகுறித்து சரியான தகவல் கொடுக்கப்பட்டு ஆந்திர மாநிலத்துக்குட்பட்ட ஓங்கோல் ரயில் நிலையத்தில் வைத்து மத்திய ரயில்வே பாதுகாப்ப படையினரால் கைது செய்யப்பட்டார். இந்த விசாரணையில் இக்குற்ற சம்பவத்தில் ஈடுபடுத்தப்பட்ட வாகனங்கள், அபகரிக்கப்பட்ட தங்க நகைகள் சம்பந்தமாகவும், வடமாநில குற்றவாளிகள் ஏற்கெனவே செய்து இருக்கும் குற்றங்களை குறித்தும் தொடா் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையில், ஜாபர் குலாம் உசேன் இரானி, மிசாம மஜாதுஷ்மேசம் இரானி ஆகிய இருவரும் சென்னை விமானநிலையத்திலும் சல்மான் உசேன் இரானி எனபவர் ஓங்கோல் ரயில் நிலையத்திலும கைதுசெய்யப்பட்டனர்.
இவர்களை மேலும் விசாரணை செய்ததில் மேற்கண்ட இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். இந்த குற்ற சம்பவத்தில் அபகரிக்கப்பட்ட நகைகள் மற்றும் இக்குற்றச்சம் பவத்துக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனத்தை மீட்பதற்காக தரமணி ரயில்வே நிலையத்துக்கு அருகே இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் அழைத்து சென்றபோது குற்றவாளி ஜாபர் குலாம் உசேன் இரானி என்பவர் குற்றத்துக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்திலிருந்து ஏற்கெனவே அவர்கள் அங்கு மறைத்து வைத்திருந்த
நாட்டுத்துப்பாக்கியை எடுத்து காவல் அதிகாரிகளை நோக்கி சுட்டார். காவல் அதிகாரிகள் சுட வேண்டாம் என்று பலமுறை எச்சரித்த போதும் மீண்டும் சுட்டார். வேறுவழியின்றி தற்காப்புக்காக சுட்டதில் மேற்படி நபர் காயம் அடைந்தார். உடனே காயம் அடைந்த நபரை சிகிச்சைக்காக அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவர் பரிசோதித்த போது ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இறந்த நபரின் உடலானது ராயப்பேட்டை அரசு மருத்துவமணையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது, என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.