வாங்கிய கடனுக்காக வீட்டை எழுதித் தருமாறு கேட்டு தாய், மகளை மிரட்டிய பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை அமைந்தகரை சான்றோர் பாளையம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் ராஜலட்சுமி (37). இவரது தம்பி விபத்தில் சிக்கிய நிலையில், மருத்துவ செலவுக்காக கடந்த 2023-ம் ஆண்டு அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த லதா என்பவரிடம் ரூ.13 லட்சத்தை கடனாக பெற்றுள்ளார். வாங்கிய கடனுக்காக ராஜலட்சுமி மாதந்தோறும் வட்டி செலுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக சரிவர வட்டியை கட்டாததால், ராஜலட்சுமியின் வீட்டுக்கு சென்று, அவரையும், அவரது தாயாரையும் லதா மிரட்டி உள்ளார். மேலும், அவர்களை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. மேலும், கடனுக்காக வீட்டை தங்களது பெயருக்கு எழுதிக் கொடுக்குமாறு லதா கூறியுள்ளார்.
இதனால் அதிரச்சியடைந்த ராஜலட்சுமி, இது குறித்து அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், லதாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட லதா மீது ஏற்கனவே கொலை உட்பட 2 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.