சென்னை: கோட்டூர்புரத்தில் நடந்த இரட்டை கொலை வழக்கில் 2 இளஞ்சிறார் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை கோட்டூர்புரம், சித்ரா நகரைச் சேர்ந்தவர் அருண் (25). சரித்திரப் பதிவேடு குற்றவாளியான இவரும், இவரது நண்பர் படப்பையைச் சேர்ந்த படப்பை சுரேஷ் என்பவரும் அதே பகுதியில் உள்ள நாகவல்லி அம்மன் கோயில் அருகே கடந்த 16-ம் தேதி இரவு மது குடித்துவிட்டு படுத்திருந்தனர்.
அப்போது, இருசக்கர வாகனங்களில் வந்த கும்பல் ஒன்று அருண் மற்றும் படப்பை சுரேஷை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியது. இக்கொலை தொடர்பாக கோட்டூர்புரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்டமாக கொலையாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தனிப்படையினர் தேடுதல் வேட்டை நடத்தி இக்கொலைக்கு மூளையாக செயல்பட்ட சுக்குகாபி சுரேஷ், அவரது கூட்டாளிகள் கோட்டூர்புரத்தைச் சேர்ந்த கரண் என்ற மனோஜ் (21), வடபழனி செல்வ கணபதி (19), ஆதம்பாக்கம் சண்முகம் (20), சோழவரம் ஜீவன் (19) மற்றும் அம்பத்தூர் மற்றும் மாங்காடு பகுதியைச் சேர்ந்த இரு இளஞ்சிறார்கள் என 7 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 7 கத்தி, 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.