காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பிரபல ரவுடி வசூல் ராஜா நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்ட வழக்கில், 10 பேரை போலீஸார் அதிகாலையில் (மார்ச் 15) கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், திருக்காலிமேடு, கே.டி.எஸ்.மணி தெருவைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர் மகன் ராஜா (எ) வசூல்ராஜா (40). இவர் கடந்த மார்ச் 11-ம் தேதி 1.30 மணிக்கு மர்ம நபர்களால் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக இவரது தாய் சரஸ்வதி (58) காஞ்சிபுரம் தாலுக்கா காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் அவர்களின் உத்தரவுப்படி டி.எஸ்.பி. சங்கர் கணேஷ் தலைமையில் போலீஸார் பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தினர். அவர்கள் கொலை நடத்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
இந்த விசாரணையின் அடிப்படையில் முதலில் 5 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் 10 பேர் சேர்ந்து இந்தக் கொலை சம்பத்தில் ஈடுபட்டது தெரியந்தது. இவர்களில் காஞ்சிபுரம் வள்ளல் பச்சையப்பன் தெருவைச் சேர்ந்த ராமன் (எ) பரத் (19), சிவா (19), திருக்காலிமேடு திலீப்குமார் (19), சூர்யா (19), சுரேஷ் (21), ஜாஹீர் (25), சுல்தான் (32), மோகனசுந்தரம் (18), சின்னகாஞ்சிபுரம் சரண்குமார்(20), ராணிப்பேட்டை, நெமிலி மணிமாறன்(19) ஆகிய 10 பேரை அய்யம்பேட்டையில் கைது செய்தனர்.
இவர்களில் பலருக்கு கை, கால்களில் முறிவு ஏற்பட்டுள்ளது. அவர்களை பிடிக்கும் முயற்சியில் தப்பி ஓடும்போது இந்த எலும்பு முறிவு ஏற்பட்டதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள், 9 கத்தி, 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக மேலும் இருவருக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகக்கின்றனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.