சென்னை: தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் லிஃப்ட் அறுந்ததில் உடல் நசுங்கி இளைஞர் உயிரிழந்தார். தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயம் அருகில் பிரபல நட்சத்திர விடுதி உள்ளது. இந்த விடுதியின் பின்புறம் உள்ள லிஃப்ட் பழுதடைந்து இருந்ததால், அதை அகற்ற விடுதி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
இதையடுத்து, பெரியமேடு பழைய இரும்பு வியாபாரி அப்துல் காதர் என்பவர், அந்த லிஃப்டை அகற்றுவதற்காக, ஷியாம் சுந்தர்(34), வினோத் உள்ளிட்ட ஊழியர்களை நேற்று விடுதிக்கு அழைத்து வந்தார். ஷியாம் சுந்தர் கீழே நின்று கொண்டிருந்தபோது, வினோத் உள்ளிட்டோர், மாடியில் இருந்து லிஃப்ட்டை கீழே இறக்கினர்.
அப்போது, எதிர்பாராத விதமாக, லிஃப்ட் அறுந்து, கீழே நின்று கொண்டிருந்த ஷியாம் சுந்தர் மீது விழுந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த தேனாம்பேட்டை போலீஸார், ஷியாம் சுந்தர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.