கோப்புப்படம் 
க்ரைம்

கோவை, பொள்ளாச்சி நகை கடைகளில் தொடர் சோதனை: ரூ.6.53 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு - ஒருவர் கைது

இல.ராஜகோபால்

கோவை: கோவை, பொள்ளாச்சியில் இயங்கி வரும் நகை கடைகளில் ஜிஎஸ்டி அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தினர். ரூ.6.53 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்த சம்பவம் தொடர்பாக ஒருவரை அதிகாரிகள் கைது செய்தனர்.

இதுகுறித்து கோவையில் உள்ள ஜிஎஸ்டி முதன்மை ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை மத்திய ஜிஎஸ்டி ஆணையரகத்தின் முறைகேடு தடுப்பு பிரிவு தலைமையக அதிகாரிகள் குழுவினர் கோவை மற்றும் பொள்ளாச்சியில் செயல்படும் தங்க நகை தொழில் நிறுவனங்களில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் பிப்ரவரி 21-ம் தேதி வரை ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் பொள்ளாச்சியில் செயல்படும் பிரபல தங்க நகை விற்பனை நிறுவனத்தில் சட்ட விரோதமாகவும், ஜிஎஸ்டி வரி செலுத்தியதற்கான ரசீது வழங்காமலும் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.

முறைகேடு செய்வதற்கு உதவும் வகையில் வணிகத்தில் இரண்டு வகையான மென்பொருள் பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்தது. இதுவரை 305 கிலோ எடையிலான ரூ.217 கோடி வரி மதிப்பு தங்க நகை வணிகத்தில் ரூ.6.53 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சம்பவத்திற்கு முக்கிய காரணமாக விளங்கிய ஒருவர் மார்ச் 5-ம் தேதி கைது செய்யப்பட்டு, நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை மார்ச் 10-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT