க்ரைம்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: 3 பேரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை

செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் 2017-ல் காவலாளி கொல்லப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். மேலும், எஸ்டேட் ஊழியர் தினேஷ் தற்கொலை செய்துகொண்டது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், தற்கொலை செய்துகொண்ட தினேஷின் வீட்டருகே வசித்து வந்த சங்கர், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கபீர், தனியார் மின் கணக்கீட்டாளர் சுரேஷ் ஆகியோர் பிப். 27-ம் தேதி (இன்று) நேரில் ஆஜராகுமாறு போலீஸார் அறிவுறுத்தியிருந்தனர். அதன்படி, மூவரும் காந்திபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நேற்று ஆஜராகினர். தற்கொலை செய்த தினேஷின் உடலை மீட்டு, ஆம்புலன்ஸில் ஏற்றும்போது உடனிருந்தது தொடர்பாக சங்கர், ஓட்டுநர் கபீர் ஆகியோரிடம் போலீஸார் விசாரித்தனர். விசாரணைக்கு பின்னர் மூவரும் மாலையில் அனுப்பி வைக்கப்பட்டனர். இவ்வழக்கு தொடர்பாக மேலும் சிலருக்கு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். அவர்களும் அடுத்தடுத்து விசாரணைக்கு ஆஜராவார்கள் என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT