க்ரைம்

சென்னை | வெளிமாநில மதுபாட்டில்களை கடத்தி வந்த இருவர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: திருவான்மியூர் பகுதியில் வெளிமாநில மதுபாட்டில்களை கடத்தி வந்த இருவரை போலீஸார் கைது செய்தனர். சென்னை திருவான்மியூர் பகுதியில் வெளிமாநில மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், அடையாறு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார், திருவான்மியூர் ஆர்டிஓ சோதனைச் சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில், வாகனத்துக்குள் சட்டவிரோதமாக வெளிமாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த சினில்(35), சென்னை கொடுங்கையூரை சேர்ந்த கலைவாணன்(34) என்பது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து 1,062 பீர் பாட்டில்கள், 160 மது பாட்டில்களை பறிமுதல் செய்து இருவரையும் சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT