ராமநாதபுரம்: சாயல்குடி அருகே அரசுப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தலைமையாசிரியர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி தாலுகா மேலமுந்தல் கடற்கரை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிந்து வந்தவர் சேட் அயூப்கான் (56). மாரியூரைச் சேர்ந்த இவர் அப்பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாவட்ட குழந்தைகள் நல அலுவலக உதவி எண்ணிற்கு பெற்றோர்கள் புகார் அளித்தனர். அதன்படி நேற்று குழந்தை நல அலுவலர்கள், வட்டாரக் கல்வி அதிகாரி பள்ளிக்குச் சென்று, மாணவிகள், பெற்றோரிடம் விசாரணை செய்தனர்.
இதன் மேல் விசாரணை இன்று நடக்க இருந்தது. இந்நிலையில் தலைமையாசிரியர் சேட் அயூப்கான் மாரியூரில் உள்ள தனது வீட்டில் இரவு தூங்கச் சென்றுள்ளார். இன்று காலை நீண்ட நேரமாகியும் அவர் எழுந்து வராததால் அவரது மனைவி எழுப்புவதற்கு அவரின் அறைக்கு சென்றுள்ளார். அப்போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. அதனையடுத்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்த சாயல்குடி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பரமக்குடி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சேதுராமன் கூறும்போது, “தலைமையாசிரியர் மீது புகார் எழுந்ததால் நேற்று குழந்தைகள் நல அலுவலர், கடலாடி வட்டார கல்வி அலுவலர் விசாரணை செய்தனர். விசாரணை அறிக்கை இன்னும் எங்களிடம் சமர்பிக்கப்படவில்லை. இந்நிலையில் தலைமையாசிரியர் தற்கொலை செய்து கொண்டுள்ளது குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்” என தெரிவித்தார்.