க்ரைம்

செயின் பறித்த வழக்கில் திருப்பம்: சென்னை பெண் காவலரிடம் பாலியல் சீண்டல் - கைதான நபர் சிறையில் அடைப்பு

செய்திப்பிரிவு

சென்னை: பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலரிடம் செயின் பறித்த சம்பவத்தில் பாலியல் சீண்டலிலும் ஈடுபட்டதும் தெரியவந்தது. பிடிபட்ட நபர் மீது பாலியல் சீண்டல் உள்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிந்து கைது செய்த போலீஸார் அவரை சிறையில் அடைத்தனர்.

சென்னை பழவந்தாங்கல் பகுதியைச சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க பெண் காவலர், பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 15-ம் தேதி இரவு பணியை முடித்து, எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மின்சார ரயிலில் பழவந்தாங்கல் சென்றார்.

ரயில் நிலைய நடைமேடையில் நடந்து சென்றபோது, திடீரென ஒருவர், பெண் காவலரின் வாயைபொத்தி, அவர் அணிந்திருந்த ஒன்றரை பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓட முன்றார். அதிர்ச்சியடைந்த பெண் காவலர் கூச்சலிட்டார்.

அப்போது, நடைமேடையில் சென்று கொண்டிருந்த சகபயணிகள், அந்த நபரை துரத்திப் பிடித்து சரமாரியாக தாக்கினர். பின்னர், மாம்பலம் ரயில்வே போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ரயில்வே போலீஸார் விரைந்து வந்து, அந்த நபரை பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

அந்த நபர் சிட்லபாக்கத்தை சேர்ந்த சத்தியபாலு (40) என்பது தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து நடத்தி விசாரணையில், போதையில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவர் மீது பாலியல் சீண்டல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதி்நது, கைது செய்தனர். தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கத்தியுடன் சுற்றிய மாணவர் கைது: பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸார் நேற்று கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்தின் பேரில், இரண்டு மாணவர்களை பிடித்து சோதனை செய்தனர். அதில் ஒருவரிடம் கத்தி இருந்தது. அவர்களிடம் விசாரித்தபோது, இருவரும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து, கத்தி வைத்திருந்த பார்த்திபன் (19) என்பவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT