கல்பாக்கம்: செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்தவர் கருப்பசாமி (48). கல்பாக்கத்தை அடுத்த அணுபுரம் நகரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
அடுக்கு மாடியின் லிப்டில் பயணிக்கும் சிறுமிகள், அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், உடன் பணியாற்றும் சக ஊழியர்களின் குழந்தைகளிடமும் பூங்கா, வணிக வளாகம் போன்ற பகுதிகளில் விளையாடும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமிகள் பெற்றோரிடம் கூறியதன் பேரில், அவர்கள் கருப்பசாமியை கடந்த ஜனவரி மாதம் தாக்கியதாக கூறப்படுகிறது.
தாக்குதலுக்கு உள்ளான கருப்பசாமி அங்கிருந்து தலைமறைவு ஆகியுள்ளார். இதையடுத்து, அப்பகுதி குடியிருப்புவாசிகள் 3 பேர் சதுரங்கபட்டினம் காவல் நிலையத்தில், கருப்பசாமியின் பாலியல் தொல்லை தொடர்பாக புகார் அளித்துள்ளனர். இதன்பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து ரகசியமாக அவரை கண்காணித்து தேடி வந்தனர். இந்நிலையில், மேற்கண்ட நபர் சொந்த ஊரான தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீஸார், அவரை கைது செய்தனர். மேலும், சதுரங்கபட்டினம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பாதிக்கப்பட்ட குழந்தைகளும் பாலியல் சீண்டலுக்கு ஆளானதாக மாமல்லபுரம் மகளிர் காவல் நிலையத்தில் வாக்குமூலம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால், மாமல்லபுரம் அனைத்து மகளிர் போலீஸார் கருப்பசாமி மீது போக்சோ வழக்கு பதிவு செய்து, திருக்கழுகுன்றம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.