க்ரைம்

ரூ.20 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்: தோணி மூலம் மாலத்தீவுக்கு கடத்த முயன்ற 4 பேர் கைது

செய்திப்பிரிவு

தோணி மூலம் தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு கடத்த முயன்ற ரூ.20 கோடி மதிப்பிலான 12 கிலோ ஹசீஷ் (கஞ்சா எண்ணெய்) போதைப் பொருளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மாலுமி, மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்) வீரர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இருந்து போதைப் பொருள் கடத்தப்படுவதாக, மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், பழைய துறைமுகம் பகுதியில் அவர்கள் ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது, சந்தேகப்படும்படியாக 2 பேர் மோட்டார் சைக்கிளில் பழைய துறைமுகத்துக்கு வந்தனர். அதிகாரிகள் உடனடியாக அவர்களை மடக்கிப் பிடித்து, சோதனை செய்தனர்.

அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளில் தலா 2 கிலோ எடை கொண்ட 6 பாக்கெட்டுகளில் போதைப் பொருள் இருந்தது தெரியவந்தது. அவற்றைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், பகுப்பாய்வுக்காக ஆய்வகத்துக்கு அனுப்பிவைத்தனர். பரிசோதனையில் அவை 'ஹசீஷ்' என்றழைக்கப்படும் கஞ்சா எண்ணெய் என்பது தெரியவந்தது. 10 கிலோ கஞ்சாவை உருக்கினால் ஒரு கிலோ ஹசீஷ் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

சர்வதேச அளவில் அதிக விலைக்கு ஹசீஷ் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் பறிமுதல் செய்யப்பட்ட ஹசீஷ் போதைப் பொருளின் சர்வதேச மதிப்பு ரூ.20 கோடி என்று கூறப்படுகிறது.

பிடிபட்ட 2 பேரிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் தூத்துக்குடி பாத்திமா நகரைச் சேர்ந்த ஜேசுராஜா (34), சுதாகர் (33) என்பதும், பழைய துறைமுகத்தில் இருந்து செல்லும் தோணி மூலம் போதைப் பொருளை மாலத்தீவுக்கு கடத்திச் செல்லவிருந்ததும் தெரியவந்தது. இருவரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.

மேலும், தோணியின் மாலுமியான தூத்துக்குடி ஜார்ஜ் சாலை பகுதியைச் சேர்ந்த கிங்ஸ்லி (56), கடத்தலுக்கு உதவிய மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் தூத்துக்குடி கோரம்பள்ளத்தைச் சேர்ந்த மாரிமுத்து (30) ஆகியோரையும் அதிகாரிகள் கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT