க்ரைம்

சென்னை விமான நிலையத்தில் ரூ.14.2 கோடி மதிப்பிலான 14.4 கிலோ கோகைன் பறிமுதல் - கென்ய பெண் கைது

சி.கண்ணன்

சென்னை: சென்னைக்கு விமான நிலையத்தில் ரூ.14.2 கோடி மதிப்புடைய 14.4 கிலோ கோகைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. எத்தியோப்பியா நாட்டில் இருந்து கடத்தி வந்த கென்யா நாட்டு பெண் கைது செய்யப்பட்டார்.

ஆப்பிரிக்கா நாடான எத்தியோப்பிய நாட்டுத் தலைநகர் அடீஸ் அபாபாவில் இருந்து எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னைக்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது கென்யா நாட்டைச் சேர்ந்த 35 வயதுடைய பெண் பயணி ஒருவர் வந்தார்.

சுற்றுலா விசாவில் சென்னை வந்த அவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் விசாரித்த போது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால், அவர் சுங்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அவரது வயிறு வழக்கத்துக்கு மாறாக பெரிதாக இருந்ததால், சந்தேகம் அடைந்த அதிகாரிகள் எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது, வயிற்றுக்குள் அதிக அளவிலான கேப்சல் வடிவிலான மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த பெண் பயணியை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, இனிமா கொடுத்து வயிற்றுக்குள் இருந்த 90 கேப்சல்களை வெளியே எடுத்தனர். அந்த கேப்சல்களை அதிகாரிகள் உடைத்து சோதனை செய்த போது, அது விலை உயர்ந்த கோகைன் போதைப்பொருள் என்பது தெரியவந்தது. ரூ.14.2 கோடி மதிப்புள்ள 1 கிலோ 424 கிராம் எடை கொண்ட போதைப்பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள், பெண் பயணியை கைது செய்து சுங்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

விசாரணையில், சர்வதேச அளவில் போதைப்பொருள் கடத்தும் கும்பலுக்கு கடத்தல் இருந்ததும், ஏற்கெனவே மும்பை, டெல்லி உள்ளிட்ட இடங்களுக்கு வந்து சென்றிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, பெண் பயணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பெண் பயணி சென்னையில் யாரிடம் போதைப்பொருளை கொடுக்க வந்தார். சென்னையில் சர்வதேச போதை கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்களா என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

7.6 கிலோ கஞ்சா பறிமுதல்: நேற்று தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.76 லட்சம் மதிப்புள்ள 7.6 கிலோ பதப்படுத்தப்பட்ட உயர்ரக கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டார். அதேபோல், துபாயில் இருந்து கடத்தி வந்தப்பட்ட ரூ.1.28 கோடி மதிப்புள்ள 1.7 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட பயணி மற்றும் விமான கேபின் க்ரூ ஊழியர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT