சங்கரலிங்கம் 
க்ரைம்

உதகையில் வீடு கட்டி தருவதாக ரூ.1.45 கோடி மோசடி: கட்டுமான நிறுவன இயக்குநர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: ஊட்டியில் வீடு கட்டித் தருவதாக ரூ.1.45 கோடி பணம் பெற்று மோசடி செய்ததாக தனியார் கட்டுமான நிறுவன இயக்குநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையைச் சேர்ந்தவர் இக்னேஸிஸ் தாமஸ் (59). இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தார். அதில், ``தி.நகரில் இயங்கி வரும் நாதன் ஃபவுண்டேஷன் என்ற கட்டுமான நிறுவனம் ஒன்றின் இயக்குநர் கே.வி.சங்கரலிங்கம் என்பவர் பத்திரிகையில் கொடுத்த விளம்பரத்தில், ஊட்டியில் வீடுகளைக் கட்டி விற்பனை செய்து வருவதாகவும், 8 மாதங்களில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் எனவும், அப்படி கட்டித் தராத பட்சத்தில் அதற்கு இழப்பீடு தொகை தருவதாகவும் தெரிவித்திருந்தார்.

இதை நம்பி எனது மனைவி, மைத்துனர் மற்றும் 2 நண்பர்கள் பெயரில் மொத்தம் 6 வீடுகள் வாங்க வேண்டி அதற்குண்டான பணம் ரூ.1 கோடியே 45 லட்சத்து 42 ஆயிரத்து 815 கொடுத்தேன். ஆனால், அவர்கள் உறுதி அளித்தபடி நடந்து கொள்ளாமல் ஏமாற்றினர். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு எனது பணத்தை திரும்ப பெற்றுத் தர வேண்டும்'' எனப் புகாரில் தெரிவித்து இருந்தார்.

இதுகுறித்து உரிய விசாரணை நடத்த காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார். அதன்படி, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இதில், மோசடி நடந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்தின் இயக்குநர் கே.வி.சங்கரலிங்கத்தை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT