சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள எஸ்பிஐ வங்கியில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது. அப்போது அலாரம் ஒலித்ததால் கொள்ளையடிக்க வந்தவர் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார். இதனால், வங்கி லாக்கரில் இருந்த பல லட்சம் ரூபாய் தப்பி உள்ளது. தற்போது தலைமறைவாக உள்ள அந்த நபரை போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையம் எதிரே வாலாஜா சாலையில் எஸ்.பி.ஐ வங்கி உள்ளது. இந்த வங்கி கிளை எந்நேரமும் பரபரப்புடன் காணப்படும். பிரதான சாலை ஓரம் வங்கி இருப்பதால் மக்கள் கூட்டம் எப்போது வந்து கொண்டே இருக்கும். இதுமட்டுமல்லாமல் இங்கேயே பணம் செலுத்தும் இயந்திரமும் (மணி டெபாசிட் மெஷின்), பணம் எடுப்பதற்கு ஏடிஎம் இயந்திரமும் உள்ளது. இதன் காரணமாக 24 மணி நேரமும் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருக்கும்.
இந்நிலையில், இந்த வங்கி பூட்டு இன்று அதிகாலை உடைக்கப்பட்டது. அதாவது, கிரில் கேட் மற்றும் வங்கியின் கதவுகளில் உள்ள பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வங்கி அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். மேலும், போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனர். திருவல்லிக்கேணி துணை ஆணையர் செல்வநாகரத்தினம், உதவி ஆணையர் அழகு, குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் இளையராஜா உட்பட மேலும் பல போலீஸார் சம்பவ இடம் விரைந்து விசாரணை மேற்கொண்டனர்.
குறிப்பாக, பணம் ஏதேனும் கொள்ளையடிக்கப்பட்டதா என வங்கி அதிகாரிகளிடம் விசாரித்தனர். ஆனால், அப்படி ஏதும் கொள்ளைபோக வில்லை என உறுதி செய்யப்பட்டதையடுத்து போலீஸாரும், வங்கி பணியாளர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். மேலும், மோப்பநாய் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. தடய அறிவியல் துறையினரும் விரைந்து கொள்ளையடிக்க வந்தவரின் கைரேகைகளை சேகரித்து சென்றனர்.
அந்த மர்மநபர் அடுத்தடுத்து இரண்டு பூட்டுகளை உடைத்து உள்ளே நுழைந்துள்ளார். பணம் வைக்கப்பட்டிருக்கும் லாக்கரை உடைக்கும்போது வங்கியில் உள்ள அலாரம் ஒலித்துள்ளது. இதை சற்றும் எதிர்பாராத அவர் அங்கிருந்து உடனடியாக ஓட்டம் பிடித்துள்ளார். இந்தக் காட்சிகள் அனைத்தும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகி உள்ளது. அதை அடிப்படையாக வைத்து விசாரித்து வருகிறோம். தலைமறைவாக உள்ள அந்த நபரை தனிப்படை அமைத்து தேடிவருகிறோம் என போலீஸ் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.