மது அருந்திய சிறப்பு உதவி ஆய்வாளர் 
க்ரைம்

வீடியோ வைரல் எதிரொலி: போலீஸ் வாகனத்தில் மது அருந்திய எஸ்.ஐ பணியிடை நீக்கம்

இ.ராமகிருஷ்ணன்

சென்னை: போலீஸ் வாகனத்தில் மது அருந்திய சிறப்பு உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பாதுகாப்பு, வன்முறை மற்றும் கலவரத்தை அடக்குதல், குற்றவாளிகளை சிறைக்கு அழைத்துச் செல்லுதல் உட்பட பல்வேறு பணிகளை ஏ.ஆர் எனப்படும் ஆயுதப்படை போலீஸார் செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த வாரம் சென்னையைச் சேர்ந்த ஆயுதப் படை போலீஸார் சிலர் கைதிகளை சிறையிலிருந்து நீதிமன்றம் அழைத்து வந்து பின்னர், சிறைக்கு அழைத்து சென்று ஒப்படைத்தனர்.

பின்னர், திரும்பி வரும்போது ஆயுதப்படை காவலர்களில் சீருடை அணியாத காவலர் ஒருவர், காவல் வாகனத்தின் பின் இருக்கையில் அமர்ந்தவாறே மது அருந்தி உள்ளார். இந்த காட்சிகள் நேற்று வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலானது. காவல் வாகனத்திலேயே இதுபோன்ற நடந்த சம்பவம் காவலர்கள் மத்தியில் மட்டும் அல்லாமல் அனைத்து தரப்பினரிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையறிந்த சென்னை காவல் ஆணையர் அருண் இதுகுறித்து விசாரிக்க உத்தரவிட்டார். அதன்படி ஆயுதப்படை பிரிவு போலீஸ் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், காவல் வாகனத்தில் மது அருந்தியது பரங்கிமலை ஆயுதப்படை பிரிவைச் சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் லிங்கேஸ்வரன் என்பது தெரிந்தது. இதையடுத்து, அவரை பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார். அதுமட்டுமல்லாமல் குற்றச்சாட்டுக்கு உள்ளான சிறப்பு உதவி ஆய்வாளர் லிங்கேஸ்வரனின் இதற்கு முந்தைய செயல்பாடுகள் குறித்தும் விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT