க்ரைம்

சென்னை | அந்தரங்க புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டி கல்லூரி மாணவியிடம் பணம் பறித்த 2 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி, கல்லூரி மாணவியிடம் பணம் பறித்ததாக தந்தை, மகன் கைது செய்யப்பட்டனர்.

மும்பையைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி ஒருவர், விடுமுறை நாட்களில் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு அடிக்கடி வருவது வழக்கம். இந்நிலையில், அந்த மாணவி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் அண்மையில் புகார் ஒன்றை அளித்தார்.

அதில், ‘கடந்த சில மாதங்களுக்கு முன்பு இன்ஸ்ட்ராகிராம் மூலம் சுஜித் (27) என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது. நெருக்கமாக பழகினோம். அப்போது, அவர் எனது அந்தரங்க புகைப்படங்களை பதிவு செய்து வைத்துக்கொண்டு பணம் கேட்டு மிரட்டுகிறார். பல ஆயிரம் பணம் அனுப்பி வைத்த பிறகும் மீண்டும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.50 ஆயிரம் கேட்டு அவரது தந்தையுடன் சேர்ந்து மிரட்டுகிறார். பணம் இல்லை என்று கூறியதால், எனது அந்தரங்க புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டுகிறார்.

இதுகுறித்து, வளசரவாக்கம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். விசாரணையில், கல்லூரி மாணவி கூறிய அனைத்து குற்றச்சாட்டுகளும் உண்மை என்பது தெரியவந்தது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு பகுதியை சேர்ந்த சுஜித் என்பவரையும், அவரது தந்தை வின்சென்ட் (55) என்பவரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில், சுஜித் பிளஸ்-2 படித்தவர் என்பதும் முதலில் பணம் வசூலிக்கும் ஏஜெண்டாகவும், பிறகு மாவுக் கடை ஒன்றில் வேலையும் பார்த்துள்ளார். அவரது தந்தை வின்சென்ட் கூலித் தொழிலாளி ஆவார். இருவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது

SCROLL FOR NEXT