க்ரைம்

சென்னை | சினிமா துறையை சேர்ந்த பலருக்கு போதைப் பொருள் சப்ளை செய்தேன்: கைதான துணை நடிகை பரபரப்பு வாக்குமூலம்

செய்திப்பிரிவு

சென்னை: அதிக பணம் சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழலாம் என்ற ஆசையில் சினிமா துறையைச் சேர்ந்த பலருக்கு போதைப் பொருள் சப்ளை செய்ததாக, கைதான துணை நடிகை பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள பிரபலமான வணிக வளாகத்தின் 7-வது நுழைவாயில் அருகே நேற்று முன்தினம் (9ம் தேதி) அண்ணாசாலை போலீஸார் கண்காணிப்பு பணியிலிருந்தனர். அப்போது, அங்கு வந்த இளம் பெண் ஒருவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார்.

இதையடுத்து அவரது உடமைகளை போலீஸார் சோதித்தபோது அதில், விலை உயர்ந்த போதைப் பொருளான மெத்தம் பெட்டமைன் வைத்திருந்தது (7 கிராம்) தெரியவந்தது. அதை பறிமுதல் செய்து போலீஸார் தொடர்ந்து விசாரித்தனர். இதில், பிடிபட்டது சென்னை கோவிலம்பாக்கத்தில் வசித்த துணை நடிகை எஸ்தர் என்ற மீனா (28) என்பது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.

போலீஸாரிடம், எஸ்தர் அளித்த பரபரப்பு வாக்குமூலம்: சின்னத்திரை, வெள்ளித்திரையில் ஜொலிக்க வேண்டும் என்பது எனது கனவு. ஆனால் சிறிய வேடங்கள் மட்டுமே கிடைத்தது. சினிமா விருந்து நிகழ்ச்சிகள், ‘பப்’ கூடங்களுக்கு சென்றால் பெயர் பிரபலமாகும் என்று நினைத்து நண்பர்களுடன் சென்று வருவேன். அப்போது ராயப்பேட்டையை சேர்ந்த தாமஸ் என்பவரின் அறிமுகம் கிடைத்தது.

மதுபழக்கம் மட்டும் இருந்த எனக்கு அவர் மூலம்தான் ‘மெத்தம்பெட்டமைன்’ போதைப் பவுடரை பயன்படுத்தும் பழக்கம் ஏற்பட்டது. இந்த போதைப் பொருளை சினிமா மற்றும் சின்னத்திரை வட்டாரத்தில் விற்பனை செய்தால் அதிக பணம் சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழலாம் என்று தாமஸ் ஆசை வார்த்தை கூறினார். நானும் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு சின்னத்திரை தொடர்களில் நடிக்கும் சில துணை நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு இந்த போதைப் பொருளை ‘வாட்ஸ் அப்’ கால் மூலம் பேசி ரகசியமாக விற்பனை செய்து வந்தேன்.

தாமஸ், இந்த போதை பொருளை எனக்கு ரூ.1,000-க்கு தருவார். நான் அதனை ரூ.3 ஆயிரம் வரையில் விற்பனை செய்து வந்தேன். தாமஸ், ‘இண்டர்நெட்’ அழைப்பு மூலமாக என்னை தொடர்புகொள்வார். அவர் சொல்லும் இடங்களுக்கு செல்வேன். ‘மெத்தம்பொட்டமைன்’ போதை பொருளை மிகச் சிறிய, பாக்கெட்டில் அடைத்து தருவார்.

போதைப் பொருள் விற்பனை தொழிலை சில மாதங்களுக்கு முன்புதான் தொடங்கினேன். இதன் மூலம் வாழ்க்கையில் விரைவில் செட்டிலாகி விடலாம் என்று மனதுக்குள் பல ஆசைகளை விதைத்து வைத்திருந்தேன். ஆனால் அதற்குள் போலீஸார் வசம் சிக்கி எனது எதிர்கால வாழ்க்கையை தொலைத்து விட்டேன். இவ்வாறு அவர் வாக்குமூலமாக கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்.

சைபர் க்ரைம் போலீஸ் உதவி: துணை நடிகை எஸ்தருக்கு போதைப் பொருளை சப்ளை செய்த அவரது நண்பர் தாமஸ் ‘இண்டர்நெட்’ அழைப்பு மூலமாகவே பேசி இருப்பதால், போலீஸாரால் அவரை நெருங்க முடியவில்லை. எனவே ‘சைபர் க்ரைம்’ போலீஸார் உதவியுடன் அவரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீஸார் தீவிரம் காட்டி உள்ளனர்.

விசாரணைக்கு பின்னர், துணை நடிகை எஸ்தர் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT