சென்னை: சென்னையில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக நைஜீரியா, ஆந்திரா வியாபாரி உட்பட 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப் பொருள் விற்பனை, கடத்தல், பதுக்கலில் ஈடுபடுபவர்களை கைது செய்ய சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலையிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அதன்படி, தனிப்படை போலீஸார் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, அரும்பாக்கம், கொடுங்கையூர், நந்தம்பாக்கம் ஆகிய பகுதிகளில் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டதாக நைஜீரியாவைச் சேர்ந்த கபீப் குளோன்ஸ் (32), ஆந்திராவைச் சேர்ந்த விஸ்வநாதன் (47) உட்பட கடந்த 2 வாரங்களில் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ஒரு கிலோவுக்கும் அதிகமான மெத்தம்பெட்டமைன், கோகைன் உள்ளிட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மெத்தம்பெட்டமைன் வகை போதைப் பொருளின் சந்தை மதிப்பு கிராமுக்கு 2,500 ரூபாய்க்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கைதானவர்களிடமிருந்து ரொக்கப்பணம், செல்போன்கள், கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.