சென்னை: குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் ஒரேநாள் இரவில் 133 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 101 பேர் பிடிபட்டுள்ளனர்.
சென்னை தாம்பரம் அருகே கானா பாடகர்கள் இருவர் கடந்த 16-ம் தேதி கொலை செய்யப்பட்டனர். இதையடுத்து, இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்து
விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விடுமாறு போலீஸ் அதிகாரிகளுக்கு காவல் ஆணையர் அபின் தினேஷ் மோடக் உத்தரவிட்டார்.
‘ஆபரேஷன் ஸ்பெஷல் டிரைவ்’ இதையடுத்து, ‘ஆபரேஷன் ஸ்பெஷல் டிரைவ்’ என்ற பெயரில் சென்னையில் ரவுடிகள், குற்றப்பின்னணி கொண்ட நபர்களுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கை நேற்று முன்தினம் இரவு மேற்கொள்ளப்பட்டது.
குறிப்பாக சென்னையில் உள்ள 12 காவல் மாவட்ட துணை ஆணையர்களின் நேரடி மேற்பார்வையில் உதவி ஆணையாளர்கள் தலைமையில், காவல் ஆய்வாளர்கள் அடங்கிய தனிப்படை போலீஸார் இரவு முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதில், ரவுடிகள், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள், குற்றப்பின்னணி கொண்ட வர்கள் என 133 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல், சென்னை பெருநகரில் பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகள் மேற்கொண்டு, சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதைப்பொருட்கள் வைத்திருந்தது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக 101 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து 21.4 கிலோ கஞ்சா மற்றும் போதைக்காக பயன்படுத்த வைத்திருந்த 1,070 வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் அபின் தினேஷ் மோடக் கூறும்போது, ‘சென்னை பெருநகர காவல் துறையினர் தொடர்ந்து சிறப்பு அதிரடி தணிக்கைகள் செய்து சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர்.
கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள், குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை கடத்தி வருபவர்கள், பதுக்கி வைப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களும் கைது செய்யப்படுகின்றனர்.
எனவே, சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக் கப்படும்’ என எச்சரித்துள்ளார். சில நாட்களுக்கு முன் தாம்பரத்தை அடுத்த படப்பை காவல் நிலைய எல்லையில், பட்டப்பகலில் நடந்த இரட்டை கொலையால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர்.
அதைத்தொடர்ந்து, தாம்பரம் காவல் மாவட்ட பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு ‘ஆபரேஷன் ஸ்பெஷல் டிரைவ்’ என்ற சிறப்பு அதிரடி நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டனர். இந்த அதிரடி சோதனையில், பல்வேறு சட்டவிரோத செயல்களில் தொடர்புடைய, 35-க்கும் மேற்பட்ட முக்கிய குற்றவாளிகளை போலீஸார் கைது செய்தனர்.
இதற்கிடையே, ‘‘இதுபோன்று பெரிய அளவில் குற்றம் நடக்கும்போது, அதிரடி சோதனை நடத்தும் போலீஸார், அந்தந்த காவல் நிலையங்களில் முறையாக ரோந்து பணி மேற்கொள்ளப்படுகிறதா என்பதை கண்காணிப்பதோடு, கட்டப்பஞ்சாயத்துக்களைதடுத்தாலே பெரும்பாலான குற்றச்செயல் கள் குறையும்’’ என்று, சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.