க்ரைம்

சென்னை | போலி நகைகளை அடகு வைத்து மோசடி: வட மாநிலத்தவர் 4 பேர் அரக்கோணத்தில் கைது

செய்திப்பிரிவு

சென்னை: மயிலாப்பூர் மந்தைவெளி ராம கிருஷ்ண மடம் சாலையில் நகை அடகுக்கடை வைத்திருப்பவர் பிரகாஷ் சந்த் (59). இவரது கடைக்கு கடந்த செப்டம்பர் 16-ம் தேதி காலை 11 மணியளவில் வாடிக்கையாளர் ஒருவர் நகையை அடகு வைக்க வந்தார். வந்தவர் இங்கு ஏற்கெனவே, நான்கு முறை நகைகளை அடகு வைத்து மீட்டுள்ளேன்.

தற்போது அவசரமாக பணம் தேவைப்படுவதால் மீண்டும் நகைகளை அடகு வைக்க வந்திருப்பதாக கூறவே, அவர் வைத்திருந்த 307 கிராம் எடை கொண்ட நகைகளை பெற்றுக்கொண்டு ரூ.15 லட்சம் கொடுத்து அனுப்பியுள்ளார். பிறகு அந்த நகைகளை பிரகாஷ் சந்த் சோதனை செய்து பார்த்த போது அவை அனைத்தும் போலியானது என தெரியவந்தது.

அதிர்ச்சி அடைந்த அவர் இதுதொடர்பாக பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இந்நிலையில், போலி நகைகளை அடகு வைத்து பணம் பெற்ற கும்பல் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அங்கு விரைந்த சென்னை போலீஸார், அங்கிருந்த ராஜஸ்தானை சேர்ந்த பிந்து (43), சுந்தர்பாபா (44), விக்ரம் பகத் (58), உத்தரபிரதேசத்தை சேர்ந்த சோனல் (38) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

விசாரணையில் தெரியவந்ததாவது: ஒவ்வொரு மாநிலத்திலும் முக்கியமான பெரு நகரங்களின் அருகில் உள்ள மாவட்டங்களில் ஒருமாதம் தங்குவார்களாம். பெரநகரங்களில் கைவரிசை காட்டிவிட்டு, பங்கு பிரித்துக் கொண்டு பிறகு சொந்த ஊருக்கு செல்வதை இவர்கள் வழக்கமாக கொண்டிருந்தனர். போலி ஆதார் கார்டுகள் மூலம் செல்போன் எண்களை வாங்கி உபயோகித்தும் வந்துள்ளனர். சென்னையில் ராயப்பேட்டை, வியாசர்பாடி பகுதிகளிலும் இதேபோல போலி நகைகளை அடகு வைத்து இந்த கும்பல் மோசடியில் ஈடுபட்டுள்ளது.

SCROLL FOR NEXT