க்ரைம்

திருவள்ளூர் அருகே சாப்பிட்ட இலையை வீட்டருகே வீசிய தகராறில் கி.வீரலட்சுமியின் கணவர் மீது தாக்குதல்

இரா.நாகராஜன்

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே வேப்பட்டில் சாப்பிட்ட இலையை வீட்டருகே வீசிய தகராறில், தமிழர் முன்னேற்றப்படை நிறுவனத் தலைவர் வீரலட்சுமியின் கணவர் மீது 4 பேர் தாக்குதல் நடத்திய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் அருகே உள்ள வேப்பம்பட்டு, பிரியா நகர், எம்.ஆர்.கே.தெருவைச் சேர்ந்தவர் கணேசன் (43).இவர், தமிழர் முன்னேற்றப்படையின் நிறுவனத் தலைவர் கி.வீரலட்சுமியின் கணவர்.

கணேசன் வீட்டருகே வசித்து வருபவர் வெங்கடேசன். இவரது உறவினர் சமீபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, உயிரிழந்தவருக்காக 16-ம் நாள் காரிய நிகழ்ச்சி இன்று பகலில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் இன்று மதியம் உணவு சாப்பிட்டனர். அவ்வாறு உணவு சாப்பிட்ட இலைகள் மற்றும் குப்பையை வெங்கடேசன் தரப்பினர் கணேசன் வீட்டருகே கொட்டியதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த கணேசன் இன்று மாலை வெங்கடேசனிடம், சாப்பிட்ட இலையை என் வீட்டருகே ஏன் கொட்டுகிறீர்கள் எனக் கேட்டார். இதனால், இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்கு வாதம் முற்றியது. இதன் விளைவாக, வெங்கடேசன் மற்றும் அவரது உறவினர்களான மணிகண்டன், பாஸ்கர், லட்சுமணன் ஆகிய 4 பேர், கட்டையால் கணேசனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், தலையில் படுகாயமடைந்த கணேசன், வேப்பம்பட்டு பகுதியில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றார். தொடர்ந்து, அவர் திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, செவ்வாப்பேட்டை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT