க்ரைம்

அமெரிக்க பெண்ணிடம் மோசடி செய்தவர் கைது: 57 தங்க கட்டி, ரூ.16 லட்சம் பறிமுதல்

செய்திப்பிரிவு

மும்பை: கடந்த இரண்டு நாட்களாக, சைபர் குற்றச் செயல்கள் தொடர்பாக மும்பையில் 7 இடங்களில் சிபிஐ சோதனையில் ஈடுபட்டது.

அப்போது, தலா 100 கிராம் எடையுள்ள 57 தங்கக் கட்டிகள், ரூ.16 லட்சம் நகைகள் ஆகியவற்றை சிபிஐ கைப்பற்றியது. 2022 ஜூன் - ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் அமெரிக்க நபர் ஒருவரின் கணினி மற்றும் வங்கி கணக்குகளை கைப்பற்றி மோசடி செய்ததாக மும்பையை சேர்ந்த ராத்தி மற்றும் அவரது கூட்டாளிகள் மீது சிபிஐ கடந்த வாரம் வழக்குப் பதிவு செய்தது. இந்நிலையில், இவ்வழக்கில் ஒருவரை கைது செய்துள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சிபிஐ கூறுகையில், “தொழில்நுட்ப ரீதியாக உதவுவதாகக் கூறி இந்த மோசடியாளர்கள் அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவரின் கணினி மற்றும் வங்கிக் கணக்கை கைப்பற்றியுள்ளனர். பின்னர், அவரிடமிருந்து ரூ.3.8 கோடி மோசடி செய்து தங்கள் கிரிப்டோ கரன்சி கணக்குக்கு மாற்றியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளது. சைபர் குற்றங்களைத்தடுக்க ‘சக்ரா 3’ என்ற பெயரில் சிபிஐ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

SCROLL FOR NEXT