அரியலூர்: அரியலூர் மாவட்டம் திருமானூரில் போலி ஆவணங்கள் மூலம் பெற்ற விசா, ஆதார் வைத்துக் கொண்டு கூலி வேலை பார்த்து வந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 13 பேரை போலீஸார் நேற்று முன்தினம் இரவு கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வங்கதேச நாட்டைச் சேர்ந்த சிலர், போலி ஆவணங்கள் மூலம் விசாவையும், கொல்கத்தாவை முகவரியாகக் கொண்டு ஆதார் அட்டையும் பெற்று தமிழகத்தில் தங்கி வேலை பார்த்து வருவதாக க்யூ பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, தமிழகம் முழுவதும் வெளி மாநிலங்களில் இருந்து வந்து தங்கி, கொத்தனார் வேலை, டைல்ஸ் ஒட்டும் பணி உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வரும் நபர்களிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், அரியலூர் மாவட்டம் திருமானூரில் ஒருவருக்கு வீடு கட்டும் பணியில் கொல்கத்தாவைச் சேர்ந்த 13 பேர் தங்கி வேலை பார்ப்பதாக கிடைத்த தகவலின்பேரில், திருமானூர் போலீஸார் அந்த நபர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதையடுத்து, அவர்களிடமிருந்த ஆவணங்களை பார்த்தபோது போலி ஆவணங்கள் மூலம் விசா, ஆதார் அட்டை வைத்திருப்பதும், அவர்கள் 13 பேரும் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
பின்னர், 13 பேரையும் நேற்று முன்தினம் இரவு போலீஸார் கைது செய்தனர். அரியலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
மேலும், மாவட்டத்தில் வெளிநாடுகளைச் சேர்ந்த நபர்கள் தங்கி உள்ளனரா என விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.