கோவை: கோவை ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே நெகமம் பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி(72). மனைவி இறந்து விட்டார். தனது மகனுக்கு தனது பெயரில் இருந்த 28 ஏக்கர் நிலத்தை வழங்கினார். மீதமுள்ள 8 ஏக்கர் நிலத்தை குப்புசாமி வாழ்வாதாரத்துக்காக வைத்திருந்த நிலையில், அந்த நிலத்தையும் கேட்டு மகன் தொந்தரவு செய்துள்ளார். கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்த மக்கள் குறை தீர்ப்பு நாள் முகாமில் புகார் மனு அளிக்க வந்த நிலையில் வளாகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி மேற்கொண்டார். உடனடியாக பாதுகாப்பு பணி மேற்கொண்ட காவலர்கள் மற்றும் அருகில் இருந்தவர்கள் தடுத்து அவரை காப்பாற்றினர். இச்சம்பவத்தால் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.