புதுச்சேரி: புதுச்சேரியில் சிறையில் தண்டனைக் கைதியாக இருந்து பரோலில் வெளிவந்து குடும்பத்துடன் தலைமறைவான கர்ணாவை 4 நாட்களுக்கு பிறகு கோவை அருகே போலீஸ் சிறப்புக் குழு கைது செய்துள்ளது.
புதுச்சேரி முத்தியால்பேட்டை அனிதா நகரைச் சேர்ந்தவர் கர்ணா. இவர் கடந்த 1997-ம் ஆண்டு நடந்த கொலையில் கைதாகி அந்த வழக்கில் தண்டனை பெற்று காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் மீது ஐந்து கொலை வழக்குகள், சிறை உடைப்பு உட்பட 20 குற்றவியல் வழக்குகள் உள்ளன. ஆயுள் தண்டனைக் கைதியான அவர் தனக்கு நன்னடத்தை விதிப்படி விடுதலை கோரி மனுத்தாக்கல் செய்தார். அதை புதுவை அரசு ஏற்கவில்லை.
இந்நிலையில், அவர் தனது மனைவிக்கு உடல்நலம் சரியில்லை எனக் கூறி பரோலுக்கு விண்ணப்பித்தார். ஏற்கெனவே பலமுறை அவர் பரோலில் சென்று சரியாக சிறைக்கு வந்ததால், 3 நாள் பரோல் வழங்கப்பட்டது. அதன்படி கடந்த 11-ம் தேதி பரோலில் கர்ணா வெளி வந்துள்ளார். பரோலில் வெளி வந்த கருணா கடந்த 13-ம் தேதி மீண்டும் சிறைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், அவர் வரவில்லை.
அதையடுத்து, அவர் மீது முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் மத்திய சிறைக் கண்காணிப்பாளர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. அதையடுத்து நடந்த விசாரணையில் கர்ணா தனது குடும்பத்துடன் தலைமறைவானது தெரியவந்தது. அவரை தேடப்படும் குற்றவாளியாக புதுவை காவல்துறை அறிவித்தது. அவரது நெருங்கிய உறவினர்களும் நண்பர்களுமான 3 பேரை போலீஸார் இன்று கைது செய்து விசாரணை நடத்தியது.
இந்த நிலையில், முத்தியால்பேட்டை அனிதாநகரில் உள்ள கருணாவின் வீடு பூட்டப்பட்ட நிலையில் இருந்தாலும் சோதனையிட போலீஸார் முடிவு எடுத்து புதுச்சேரி 3-ஆவது நடுவர் நீதிமன்றத்தில் அனுமதி கோரினர். கர்ணா வீட்டை சோதனையிட்டால் ஆவணங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று ஆய்வாளர் செந்தில்குமார் மனுவில் தெரிவித்திருந்தார். இதையடுத்து வீட்டின் பூட்டை உடைத்து சோதனையிட அனுமதி தரப்பட்டது.
இச்சோதனை இன்று மாலை நடந்தது. இச்சூழலில் கர்ணாவின் நெருங்கிய கூட்டாளிகள் அளித்த தகவலின் அடிப்படையில் கோவையில் இருந்த ரவுடி கர்ணாவை புதுச்சேரி சிறப்பு படை போலீஸார் கைது செய்ததாக காவல்துறை உயர் அதிகாரிகள் உறுதி செய்தனர். தற்போது விசாரணை நடந்து வருகிறது.