சிவகங்கை: சிவகங்கை அருகே நகை அடகுக் கடை சுவரில் துளையிட்டு ரூ.1 கோடி மதிப்பிலான நகைகள் மற்றும் பணம் திருடப்பட்டது குறித்துபோலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சிவகங்கை அருகேயுள்ள சிங்கினிப்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டித்துரை. இவர் மதகுபட்டி பேருந்து நிலையம் அருகேயுள்ள வணிக வளாகத்தில் நகை அடகுக் கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அடகுக் கடையின் பின்புறச் சுவரில் துளையிட்டு உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், லாக்கரில் இருந்த ரூ.1 கோடி மதிப்பிலான நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து மதகுபட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தில் கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். கடைக்கு முன் கிடந்த ஒரு ஜோடி கையுறைகளை போலீஸார் கைப்பற்றினர்.
5 தனிப்படைகள் அமைப்பு: மாவட்ட காவல் கண்காணிப் பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ், திருட்டு நேரிட்ட அடகுக் கடையில் விசாரணை நடத்தினார். அவரது உத்தரவின் பேரில் டிஎஸ்பி சிபிசாய் சவுந்தர்யன், ஆய்வாளர் மணிகண்டன் தலைமையிலான 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, திருட்டில் ஈடுபட்டவர்களைத் தேடி வருகின்றனர்.
விடுப்பில் சென்ற காவலாளி: இதுகுறித்து போலீஸார் கூறும்போது, அடகுக் கடை பின்புறம் உள்ள தனியார் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் வழியாக வந்த மர்ம நபர்கள், சுவரை கடப்பாரையால் இடித்து துளையிட்டு, கடைக்குள் புகுந்துள்ளனர். சம்பவத்தன்று காவலாளி விடுப்பில் சென்றுள்ளது, சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று கூறினர்.