சென்னை: தேநீர் கடையில் கிண்டல் செய்த இளைஞர் மீது கொதிக்கும் பாலை இளம் பெண் ஊற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை திருவல்லிக்கேணி மாட்டான் குப்பம் பகுதியை சேர்ந்தவர் பிரேம் குமார் (30). கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நீச்சல் பயிற்சியாளராக உள்ளார்.
இவர் நேற்று முன்தினம் இரவு 7.30 மணி அளவில், தன் வீடு அருகே உள்ள டீக்கடைக்கு சென்றுள்ளார். அவருக்கு ஏற்கெனவே நன்கு அறிமுகமான 24 வயது இளம் பெண் ஒருவரும் அப்போது பார்சல் டீ வாங்க அங்கு வந்துள்ளார்.
அந்த பெண்ணுக்கு அடுத்த வாரம் திருமணம் ஆக உள்ள நிலையில், பிரேம் குமார் இதை குறிப்பிட்டு வழக்கம்போல, கிண்டலாக பேசியுள்ளார். இதை கேட்டு, அங்கு இருந்தவர்கள் சிரித்துள்ளனர்.
இதில் கோபம் அடைந்த அந்த பெண், டீக்கடையில் கொதித்துக் கொண்டிருந்த பாலை, பாத்திரத்துடன் எடுத்து பிரேம் குமார்மீது வீசியுள்ளார். இதனால், அவரது வயிறு, கை, தோள்பட்டை என உடல் முழுவதும் கொப்பளம் ஏற்பட்டுள்ளது. வலியால் துடித்த அவரை அங்கிருந்தவர்கள் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து அண்ணா சதுக்கம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.