ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொண்ட இளைஞர் தினசீலன் 
க்ரைம்

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த மயிலாடுதுறை இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

சி.எஸ். ஆறுமுகம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில்,ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை பெரியத்தெருவைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகன் தினசீலன்(31). இவர், சுவாமிமலையில் உள்ள தனியார் விடுதியில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், தினசீலன், புதன்கிழமை காலை வழக்கம் போல் எழுந்து சில பணிகளைச் செய்து விட்டு மீண்டும் தனது அறைக்குச் சென்றுள்ளார். பின்னர், நீண்ட நேரமாகியும் அவர் வெளியில் வராததால், அங்கு சென்று பார்த்தபோது, தினசீலன், மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இது தொடர்பாக மயிலாடுதுறையில் உள்ள அவரது உறவினர்களுக்கும், சுவாமிமலை காவல் நிலையத்துக்கும் விடுதி நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. இதையடுத்து, தினசீலனின் தாயார் கஸ்தூரி, சுவாமிமலை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், இந்த தற்கொலை குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீஸார் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், தினசீலன் மயிலாடுதுறையில் பல்வேறு நபர்களிடம் லட்சக்கணக்கான ரூபாயை கடனாகப் பெற்று ஆன்லைன் ரம்மி விளையாடி அந்தப் பணம் முழுவதையும் இழந்துள்ளார். இதையறிந்த, அவரது உறவினர்கள், கடந்த 2 மாதத்துக்கு முன்புதான் சுவாமிமலையில் உள்ள தனியார் விடுதியில் அவருக்கு வேலை வாங்கி கொடுத்துள்ளனர்.

அங்கு வந்தபிறகும், தினசீலன் ஆன்லைனில் ரம்மி விளையாடி பல ஆயிரங்களை இழந்திருக்கிறார். அதனை திருப்பி தர முடியாததால், மன வேதனையில் இந்த முடிவை எடுத்துள்ளதாக தற்கொலைக்கு முன்னதாக கடிதம் எழுதி அதை தனது பாக்கெட்டில் வைத்திருந்திருக்கிறார். அந்தக் கடிதத்தை கைப்பற்றிய போலீஸார், தொடர்ந்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கை பெற சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கும் தொடர்புகொண்டு பேசலாம்.

SCROLL FOR NEXT