திருடுபோன மாடுகள் மீண்டும் கிடைத்த மகிழ்ச்சியில் விவசாயி பட்டுராஜ். ( உள்படம் ) தோட்ட வாயிலில் எழுதி வைக்கப்பட்டிருந்த அட்டை 
க்ரைம்

திருடிய மாடுகளை கைவிட்டு போர்டு எழுதி வைத்த திருடன் - சாத்தான்குளம் அருகே சம்பவம்

செய்திப்பிரிவு

தூத்துக்குடி: சாத்தான்குளம் அருகே மாடுகளை திருடிச் சென்ற நபர், போலீஸில் சிக்கிவிடுவோமோ என்ற பயத்தில், அட்டையில் எழுதி வைத்து விட்டு மாடுகளை வேறு இடத்தில் விட்டுச்சென்ற சுவாரசியமான சம்பவம் நடந்துள்ளது.

சாத்தான்குளம் அருகே உள்ளஞானியார்குடியிருப்பைச் சேர்ந்தவர் பட்டுராஜ். இவருக்கு சொந்தமான தோட்டம் புதுக்குளம் சந்திப்புபகுதியில் உள்ளது. அந்த தோட்டத்தில் பசு மாடுகளை வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 28-ம் தேதி பட்டுராஜ் தோட்டத்தில் கட்டப் பட்டிருந்த மாடுகளில் இரண்டை மட்டும் காணவில்லை. மாடுகளை மர்ம நபர்திருடிச் சென்றிருந்தது தெரிய வந்தது. சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

மேலும், தனது மாடுகளை கண்டுபிடிப்பதற்காக அருகில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்துள்ளார். அதோடு வள்ளியூர் மற்றும் மேலப்பாளையம் மாட்டுச்சந்தைக்கு சென்று தனது மாடுகளின் புகைப்படத்தை காண்பித்து யாரும் கொண்டு வந்தால் தனக்கு தகவல் தெரிவிக்கும்படி கூறியுள்ளார்.

நேற்று காலை பட்டுராஜ் வழக்கம்போல் தோட்டத்துக்கு சென்றுள்ளார். தோட்டத்தின் வாசலில் ஒருஅட்டை கட்டப்பட்டிருந்தது. அந்த அட்டையில் 'உங்களது மாடு சங்கரன்குடியிருப்பு கெபி அருகே உள்ள புளியமரத்து அடியில் கட்டப்பட்டுள்ளது. இட்டமொழி கிழக்கு' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உடனே அதில் குறிப்பிட்டிருந்த இடத்துக்கு பட்டுராஜ் வேகமாக சென்று பார்த்துள்ளார். அங்கு அவரது 2 மாடுகளும் கட்டப்பட்டிருந்ததை கண்டு மகிழ்ச்சியில் மாடுகளை அவிழ்த்து, தனது தோட்டத்துக்கு கொண்டு வந்தார்.

மாடுகளை பட்டுராஜ் தீவிரமாக தேடி வருவதை அறிந்த அந்த நபர், அட்டையில் மாடு இருக்கும் இடத்தின் விவரத்தை எழுதி வைத்து விட்டு மாடுகளை விட்டுச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக சாத்தான்குளம் போலீஸார் அந்த நபர் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT