ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் முத்துக்கொத்தனார் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள்சாமி. இவரது மனைவி ஜோதி. இவர்களது இளைய மகள் பாண்டிச்செல்வி(25), ராஜபாளையத்தில் உள்ள ஜவுளிக் கடையில் வேலைபார்த்து வருகிறார்.
இந்நிலையில், பாண்டிச்செல்விக்கும், மதுரையைச் சேர்ந்த குணசேகர் என்பவருக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது.
சில நாட்களுக்கு முன்பு ராஜபாளையம் வந்த குணசேகர், தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு பாண்டிச்செல்வி யிடம் வற்புறுத்தினார். ஆனால், அவர் மறுத்துவிட்டார். இதற்கிடையில், நேற்று காலை பாண்டிச்செல்வி வீட்டுக்கு வந்த குணசேகர், தான் பாட்டிலில் கொண்டு வந்த மண்ணெண்ணெயை பாண்டிச்செல்வி மீது ஊற்றி, தீ வைத்துவிட்டு, அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
இதில் பாண்டிச்செல்விக்கும், அவரைக் காப்பாற்ற முயன்ற அக்கா பாண்டீஸ்வரிக்கும் தீக்காயம் ஏற்பட்டது. அலறல் சப்தம் கேட்டுவந்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக ராஜபாளையம் தெற்கு போலீஸார் வழக்கு பதிவு செய்து, குணசேகரைத் தேடிவருகின்றனர்.