சென்னை: சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து கடைகளின் பூட்டுகளை உடைத்து திருட்டில் ஈடுபட்டதாக பிரபல கொள்ளையன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை கெருகம்பாக்கம், விக்னேஸ்வரா நகரைச் சேர்ந்தவர் நரேஷ்குமார் (30). இவர் கோயம்பேடு, பெரியார் மார்க்கெட் வளாகத்தில் செல்போன் விற்பனை மற்றும் சர்வீஸ்செய்யும் கடை நடத்தி வருகிறார்.
இவர் கடந்த 24-ம் தேதி இரவு அவரது கடையை பூட்டிவிட்டு மறுநாள் காலை பார்த்தபோது, அவரது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த செல்போன்கள் மற்றும் பணம் திருடு போயிருந்தது தெரியவந்தது.
குடியாத்தத்தை சேர்ந்தவர்: அதிர்ச்சி அடைந்த நரேஷ்குமார் இதுகுறித்து கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். முதல் கட்டமாக சம்பவ இடம் மற்றும் அதை சுற்றி பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் அடைப்டையில் திருட்டில் ஈடுபட்டதாக வேலூர் மாவட்டம் குடியாத்தத்தைச் சேர்ந்த பாண்டி என்ற பாண்டியனை (33) போலீஸார் கைது செய்தனர்.
விசாரணையில் பாண்டியன் சென்னையில் அரும்பாக்கம், அண்ணாநகர், அமைந்தகரை மற்றும் சூளைமேடு காவல் நிலைய எல்லைகளில் உள்ள கடைகளில் அடுத்தடுத்து பூட்டுகளை உடைத்து திருடியது தெரியவந்தது.
மேலும் விசாரணையில் இவர் மீது ஏற்கெனவே, செய்யாறு, வேலூர், குடியாத்தம், பள்ளிப்பட்டு காவல் நிலைய எல்லைகளில் பூட்டை உடைத்து திருடிய வழக்குகள் உள்ளது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.