க்ரைம்

சாலையில் பைக் சாகசம்: டெல்லி போலீஸ் வலையில் சிக்கிய ‘ஸ்பைடர்மேன்’ ஜோடி!

செய்திப்பிரிவு

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் ஸ்பைடர்மேன் போல சாலையில் பைக் சாகசம் செய்த இருவர் போலீஸ் வலையில் சிக்கினர். அவர்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மார்வெல் காமிக்ஸின் கற்பனை கதாபாத்திரம் ஸ்பைடர்மேன். இந்தக் கதாபாத்திரத்தை மையமாக வைத்து உலக அளவில் திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. ஸ்பைடர்மேன் பாத்திரம் பலரையும் கவர்ந்துள்ளது. ஒரு கட்டிடத்தில் இருந்து மற்றொரு கட்டிடத்துக்கு ஸ்பைடர்மேன் தாவி செல்வார். அதுபோல டெல்லி நகர சாலையில் பைக் சாகசம் செய்ய இருவர் முயன்றுள்ளனர்.

நம்பர் பிளேட் இல்லாத அந்த பைக்கில் ஸ்பைடர்மேன் உடையில் ஆண் ஒருவரும், ஸ்பைடர்வுமன் உடையில் பெண் ஒருவரும் பயணித்தனர். சாகசம் செய்தபடி செல்லும் அவர்களது வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. அந்த வீடியோ துவாரகா பகுதியில் எடுக்கப்பட்டது என உறுதியானது. தலைக்கவசம் அணியாமல் அவர்கள் இருவரும் பயணித்தனர்.

அது குறித்து போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் இருவரும் நஜாப்கர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அந்தப் பகுதியை சேர்ந்த 20 வயதான ஆதித்யா மற்றும் 19 வயதான அவரது தோழி தான் அது என உறுதியானது. இருவரும் சமூக வலைதள பிரபலம். அதனால் இந்தச் செயலை செய்துள்ளனர்.

அவர்கள் மீது பொது மக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை இயக்கியது உட்பட சுமார் 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT