உடுமலை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டத்துக்கு உட்பட்ட கூளநாயக்கன்பட்டி அடுத்த பனைமரத்துப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்புசாமி(38). இவர் உடுமலை கணக்கம்பாளையம் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், அவர் நேற்று வீட்டில் விஷம் குடித்துவிட்டார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை பெற்றோர் மற்றும் உறவினர்கள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். தொடர்ந்து, அவரது உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் சங்க நிர்வாகிகள் கூறும்போது, ‘‘தற்கொலை செய்துகொண்ட கிராம நிர்வாக அலுவலர், பணியில் நேர்மையைக் கடைப்பிடித்தவர். சில நாட்களுக்கு முன் அவரைப் பற்றி தவறான செய்தி வெளியானது. இதில் மனமுடைந்த நிலையில் இருந்த அவர், சக அலுவலர்களிடம் வேதனை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது’’ என்றனர். இது தொடர்பாக கோமங்கலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.