க்ரைம்

கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் சிறை: மயிலாடுதுறை நீதிமன்றம் தீர்ப்பு

செய்திப்பிரிவு

மயிலாடுதுறை: கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து, மயிலாடுதுறை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோவில் அருகேஉள்ள மருவத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுக்தேவ்(36). கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 9-ம் தேதி இவருக்கும், அதே ஊரில் உள்ள பெரிய தெருவைச் சேர்ந்த ஆனந்தன் என்பவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

பின்னர் ஆனந்தின் உறவினர்களான செல்வம் (எ) ரவிச்சந்திரன்(55), அரவிந்தன்(31), பாலகுரு(49), சிவசாமி (60), சிவகுரு (58) ஆகியோர் கட்டையால் சுக்தேவை கடுமையாகத் தாக்கிஉள்ளனர். இதில் பலத்த காயமடைந்த சுக்தேவ், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி ஜூன் 16-ம் தேதி உயிரிழந்தார்.

இது தொடர்பாக வைத்தீஸ்வரன்கோவில் போலீஸார் வழக்குபதிவு செய்து, செல்வம் உள்ளிட்ட5 பேரையும் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு, மயிலாடுதுறை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமாரி, குற்றம் சாட்டப்பட்ட செல்வம் உள்ளிட்ட 5 பேருக்கும் ஆயுள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் ராமசேயோன் ஆஜரானார்.

SCROLL FOR NEXT