க்ரைம்

ஜெப வழிபாட்டு நிகழ்வில் உணவருந்திய பெண் உயிரிழப்பு: 8 பேர் உடல்நலம் பாதிப்பு @ ஆனைமலை

செய்திப்பிரிவு

ஆனைமலை: ஆனைமலையில் உள்ள சர்ச் ஒன்றில் நடந்த ஜெப நிகழ்ச்சியில் உணவு அருந்திய பெண் உயிரிழந்தார். உடல்நலம் பாதிக்கப்பட்டு 8 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவை மாவட்டம் ஆனைமலை பேரூராட்சி தெற்கு தெருவில் பெந்தகொஸ்தே திருச்சபை செயல்பட்டு வருகிறது. நேற்று அப்பகுதியை சேர்ந்த 15-க்கும் மேற்பட்டவர்கள் திருச்சபையில் நடந்த ஜெப வழிபாட்டில் கலந்து கொண்டனர். வழிபாடு முடிந்த பின்னர் மதியம் 2.30 மணி அளவில் அங்கு வழங்கப்பட்ட மதிய உணவை சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பியுள்ளனர். சிறிது நேரத்தில் அவர்களில் 9 பேருக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டு வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது.

அதில் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்ட ஆனை மலை குமரன் குட்டை பகுதியைச் சேர்ந்த கருப்புசாமி என்பவரின் மனைவி சிவகாமி ( 70 ) மாலை 6 மணியளவில் வீட்டிலேயே உயிரிழந்தார். உடல் நிலை பாதிக்கப்பட்ட மற்றவர்கள் வேட்டைக்காரன் புதூர் அரசு மருத்துவமனை, அம்பராம் பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து ஆனைமலை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT