சென்னை: சென்னை ஓட்டேரியில் தலைமைக் காவலர் மனைவியிடம் நகைப்பறிப்பில் ஈடுபட்டதாக ஹரியாணாவைச் சேர்ந்த 3 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீஸார் பிடிக்க முயன்றபோது, நிலை தடுமாறி கீழே விழுந்ததில் 3 பேரின் கைகளும் உடைந்தன.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை ஓட்டேரி, காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசிப்பவர் தலைமைக் காவலர் சுரேஷ் பாபு. இவர் சென்னை பெருநகர காவல்துறையின் கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றுகிறார். இவரது மனைவி சுகாசினி (38). இவர் கடந்த 7-ம் தேதி ஓட்டேரி ஸ்டீபன்சன் சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த இரு நபர்கள், சுகாசினி அணிந்திருந்த 4 பவுன் தங்கச் செயினை பறித்து தப்பினர். இது குறித்து ஓட்டேரி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். விசாரணையில், வட மாநிலத்தைச் சேர்ந்த 3 மர்ம நபர்கள் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார், அவர்கள் தொடர்பான தகவல்களை திரட்டத் தொடங்கினர்.
இதில் 3 பேரும் சேப்பாக்கத்தில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை பின்தொடர்ந்த போலீஸார், ஓட்டேரி பனந்தோப்பு ரயில்வே காலனி அருகே 3 பேரையும் நேற்று முன்தினம் பிடிக்க முயன்றனர். போலீஸாரை பார்த்த 3 பேரும் தப்பியோடினர். இதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் 3 பேரின் கைகளும் உடைந்தன. பின்னர் அவர்களை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்து, விசாரித்தனர்.
விசாரணையில் 3 பேரும் ஹரியாணா மாநிலத்தை சேர்ந்த சச்சின் குமார் (24), அங்கிட் (20), அங்கிட் யாதவ் (26) என்பதுதெரியவந்தது. சச்சின் குமாரும், அங்கிட்டும் நேரடியாக வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். அங்கிட்யாதவ், இருவருக்கும் உதவியாக இருந்துள்ளார்.
ஹரியாணா மாநிலத்தில் இருந்து ரயில் மூலம்சென்னை வந்து, இங்கு தங்கும்விடுதியில் தங்கி வழிப்பறியில் ஈடுபடுவதை 3 பேரும் வாடிக்கையாக வைத்து இருந்துள்ளனர். மேலும், இவர்கள் 3 பேரும் கடந்த9-ம் தேதி பெரம்பூரைச் சேர்ந்தசாமுண்டீஸ்வரி என்ற பெண்ணிடமும் நகைப்பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.