வெவ்வேறு தோற்றத்தில் முசாவீர் ஹூசேன் சாஹீப் மற்றும் மதீன் அஹமது தாஹா 
க்ரைம்

குற்றவாளிகள் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.10 லட்சம்: பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கில் புகைப்படங்களை வெளியிட்டு என்ஐஏ அறிவிப்பு

இரா.வினோத்

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள ராமேஷ்வரம் கஃபே உணவகத்தில் கடந்த 1-ம் தேதி குண்டுவெடித்ததில் 10 பேர் காயமடைந்தனர். இது குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்ற‌னர்.

இது தொடர்பாக தமிழ்நாடு, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் 18 இடங்களில் சோதனை நடத்தினர். இந்நிலையில் நேற்றுமுன்தினம், இந்த சதி செயலுக்கு உடந்தையாக இருந்தமுஷம்மில் ஷெரீப் கைது செய்யப்பட்டார். அவரை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் சில முக்கிய தகவல்கள் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தேசியபுலனாய்வு முகமை நேற்று, 2 முக்கிய குற்றவாளிகளின் 6 புகைப்படங்களுடன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், “பெங்களூரு உணவகத்தில் குண்டு வைத்த நபர் முசாவீர் ஹூசேன் சாஹீப் (30) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இதற்கான சதி திட்டத்தை தீட்டிய நபர் அப்துல் மதீன் அஹமது தாஹா (30) என கண்டறியப்பட்டுள்ளது. ஷிமோகா மாவட்டம் தீர்த்தஹள்ளியை சேர்ந்த இவர்கள் போலி ஆவணம், ஆள் மாறாட்டம், பெயர்மாற்றம் செய்து தப்பி வருகின்றனர்.

இந்த இருவரை பற்றி தகவல் அளிப்ப‌வர்களுக்கு தலா ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும். info.bir.nia@gov.in என்ற மின்னஞ் சல் அல்லது 080 2951099, 890424110 ஆகிய தொலைபேசி எண்களில் தகவல் கொடுக்கலாம்” என அறிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT